நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, March 29, 2015

குறும்பாக்கள்!

துளை விழுந்த ஓடம் படிப்படியாய் தாழும்
களை வளர்ந்த வயல் விளைச்சலில் வீழும்!
 ..................................................................................

நீதியறு நாடும்
ஓதலறு வீடும்
ஒருநாளும் வளராது!
..............................................

வாளியில்லாமல் வானம்
கடலில் தண்ணியள்ளுகிறது
பூவாளியால்
பூமிக்குத் தெளிப்பதற்கு!
...........................................................

பட்டியடிப்பிட்டியிலே
பொட்டியோட நிப்பவளே
பொட்டிக்க என்ன புள்ள
புட்டா இடியப்பமா?

..............................................................
பட்டைஎண்டா என்ன புள்ள
புட்டிய நான் தொட்டதில்ல
கட்டிக்கப்போறபுள்ள நீ
பெட்டியோட நிண்டதால
வெட்டியா கேட்டுப்புட்டன்
வேறேதும் இல்ல புள்ள!

.................................................................. 

மின்னல்

குறுங்கவிதை
மின்னல்
.................
நடு ராத்திரி
ஒரே தொடரிடி
இருளில் எட்டிப்பார்த்தேன்
வானில் படர்ந்தது
ஒளிக்கொடி!

Tuesday, March 24, 2015

குறும்பா-

சந்தியிலே நிற்க ஏலா
முந்தி எங்கும் போகக்கூடா
பிந்தி நான் வீடுவந்தால்
கொம்பலும் தாங்க ஏலா!

இஞ்ச கொஞ்சம்
வாடா மச்சான் எனக்கு
இஞ்சி திண்டால் போலிருக்கு
பொடிச்சிர 
மூஞ்சியும்தான் நீண்டிருக்கு!

Monday, March 23, 2015

நேரமில்லை

நேரமில்லை!
........................
எனக்கொரு சம்மட்டி தாருங்கள்
கடிகாரத்தை கொஞ்சம் தட்டி
நேரத்தினை
சற்று கூட்டிப்பார்க்கப்போகிறேன் !

அதிகாலையைக்கொஞ்சம்
அதிகரிக்க வேண்டும்
அந்தியாவதையும்
பிந்திப்போட வேண்டும்
பகலிலே ஒரு பந்தி வைத்து
பகலவனைப் பசியாறச்செய்ய வேண்டும்
அதனால் அவனது பயணம்
கொஞ்சமாவது தாமதமாகுமல்லவா
பதற்றம் பற்றிக்கொள்ள
தொட்டதை விட்டு விட்டு
அடுத்ததைப் பார்க்கவேண்டும்
பயமும் சுயமாக வந்துவிடுகிறது !
செவ்வாய்க்குச்
செல்லும் நாட்கள் மட்டும்
நீண்டுகொண்டு செல்ல
பூமியிலுள்ளோரின் நேரம் மட்டும்
குறுகிக்கொண்டே வருகின்றது!
எனக்கொரு சம்மட்டி தாருங்கள்
கடிகாரத்தை கொஞ்சம் தட்டி
நேரத்தினை
சற்று கூட்டிப்பார்க்கப்போகிறேன்
ஏனெனில்
தொடங்கியதெல்லாம்
முடியுமுன்னே
அடுத்தவேலை வந்து
பிடரியினைப்
விடாப்பிடியாக பிடித்துக்கொள்கின்றது
சில வேலைகள் தொடங்கப்படாமலேயே
இன்னும் கிடப்பில் கிடக்கிறன!
மு.இ.உமர் அலி
2015 March 23rd