நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, July 26, 2015

தொட்டில் சாக்கு - மாட்டுவண்டி-4



தொட்டில் சாக்கு -
மாட்டுவண்டி-4
..............................................................
மாட்டுவண்டியின் அடிப்பக்கம் இருக்கும் பலகைக்கு கீழாக சில்லு பொருத்தப்பட்டிருக்கின்ற  அச்சுக்கு முன்பாக ஒரு சாக்கு அல்லது உரப்பையை நான்கு மூலையிலும் இணைத்து கட்டப்பட்டிருக்கும் ஒரு அமைப்பாகும் ,உருவத்தில் ஒரு தொட்டி போல இது இருப்பதனால் "தொட்டிச்சாக்கு" என பெயர்பெற்றிருக்கின்றது.
தொட்டிச்சாக்கினுள் வண்டியின் பாவனைக்கு தேவையான கயிறுகள் ,அரிக்கன் லாம்பு, புல் அறுப்பதற்கான அரிவாள் (தாக்கத்தி ),திருக்குக்கம்பு போன்றவற்றை வைப்பார்கள்,சிலர் சிறிய அளவிலான அடைக்கட்டை போன்றவற்றையும் வைப்பார்கள்.
வண்டிகள் ஏற்ற ,இறக்கமான இடங்களில் நிறுத்தப்பட்டு பொருட்கள் ஏற்றும்போது அவை முன் பின் நகராமல் இருப்பதற்காக சில்லின் அடியில் இந்த அடைக்கட்டைகளை வைப்பார்கள்.

கயிறுகளில் மூட்டான்,தேடா,நைலோன் போன்ற வெவ்வேறு வகையான கயிறுகள் வைத்திருப்பார்கள்,ஏற்றிச்செல்லப்படும் பாரங்களுக்கு ஏற்ப கயிறுகளை தெரிவுசெய்வார்கள்

பாரங்களை ஏற்றி கயிற்றினால் கட்டிய கட்டினை இறுக்குவதற்காக சுமார் ஓரடி நீளமான உறுதியான கம்புகளால் கயிற்றினை திருகுவார்கள்,இவ்வாறு திருகுதல் "திருக்குப்போடுதல்" எனப்படும்.
 காடுகளுக்கு  மரம்வெட்டச்செல்வோரில் சிலர்  தமது சமையல்  பாத்திரங்கள்,அரிசி புளி போன்றவற்றையும்  தொட்டில் சாக்கினுள்தான்  வைப்பார்களாம்.

நிந்தவூர் பிரதேசத்தில் மாட்டுவண்டிகளை தயாரிப்பதில் பிரபல்யமும் நுணுக்கமும்வாய்ந்த சுலைமாலெவ்வை ஓடாவி-அல்லது நெடிய ஓடாவி வயோதிகத்தினால் சுகவீனமுற்றதன் பின்னர் இப்பிரதேசத்தில்  உள்ள வண்டில்காரர்கள் திருத்த வேலைகளுக்காகவும் ,புதிய வண்டில்களை அமைப்பதற்காக்கவும் சம்மாந்துறை,சாய்ந்தமருது போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். அந்த ஒரோர்களில் இன்னும் வண்டில்கள் தயாரிக்கக்கூடிய ஓடாவிமார் இன்னும் இருக்கின்றார்கள்.

Wednesday, July 22, 2015

மாட்டுவண்டிகள்!

மாட்டுவண்டிகள்-தொடர்  3
................................
மாட்டு வண்டி வைத்திருப்போர் மாடுகளிற்கு தீவனமாக வைக்கோல்,தவிடு போன்றவற்றையே கொடுப்பதே வழமை.வயல் அறுவடை களத்தில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வண்டிகள் சாரி சாரியாக செல்லும்.சூடடித்த களவெட்டியை சூட்டுக்கலவேட்டி என அழைப்பார்கள்.
சூட்டுக்களவெட்டியில் சிந்திக்கிடக்கும் வைக்கோலை வண்டில் காரர்கள் " குத்தூசி "எனப்படும் ஆயுதம் மூலமாக ஒன்று திரட்டி வண்டியில் ஏற்றுவார்கள்.சிறிய வண்டியில் பெருமளவிலான வைக்கோலை ஏற்றுவது அவர்களுக்கு அனுபவ ரீதியான ஒரு கலையாகும்.
வண்டி வீதியால் செல்லும்போது பின்னால் ,இடது வலது பக்கங்களில் வருவது என்ன வாகனம் என்று வண்டிக்காரகளால் அறிந்து கொள்ள முடியாது.
வண்டிகளில் ஏற்றிவந்த வைக்கோலை வளவுகளில் மேட்டுபக்கமான இடத்தில் நல்லதோர் அடித்தளத்தை போட்டு அதன்மேல் கும்பமாக குவிப்பார்கள்,உருவத்தில் இத்தகு ஒரு "நெற்சூடு "போல தெரியும்.இதனை "வைக்கோல் கந்து" என அழைப்பார்கள்.
இவ்வாறு குவிக்கப்பட்ட வைக்கோல் கந்திலிருந்து வைக்கோலை தினமும் உருவி எடுத்து மாடுகளிற்கு தீவனமாக போடுவார்கள்.வைக்கோலை ஒரே பக்கம் உருவாமல் வட்ட வடிவமாகவே உருவுவார்கள்.ஏனெனில் கந்து சரிந்து விழுந்துவிடாமல் இருப்பதற்காகவே.
வைக்கோல் போரின் அடியில் வீட்டின் பேட்டுக் கோழிகள் சென்று முட்டையிடும்.வீட்டுச்சிருவர்கள் மலை நேரங்களில் மறைந்து விளையாடுவார்கள்,வைக்கோல்போரில் விளையாடுவது நன்றாய் இருக்கும் ஆனால் அதன் "சுணை"இலகுவில் சென்றுவிடாது.
"சில நாய்கள் வைக்கோல் கந்தின் அடியில் தூங்கிக்கொண்டிருக்கும்,யாரும் வைக்கோல் எடுப்பதற்கென்று கிட்டபோனால் உறுமும்,குரைக்கும்,ஆனால் அந்த நாய் ஒருநாளும் வைக்கோல் உண்பதே இல்லை"
இந்தப்பிராந்தியத்திலிருந்த வண்டில்காரர்கள் எண்பதுகளிலும் அதற்கு முற்பகுதிகளிலும் வைக்கோலை சூடடித்த வயல்களில் இருந்து ஏற்றி ஒலுவில் உள்ள வைக்கோல் சேகரிக்கும் நிலையத்தில் விற்பனை செய்வது அன்று இருந்த ஒரு நல்ல வருமானமுள்ள தொழிலாகும்.நாளடைவில் பயங்கரவாதப்பிரச்சினை தலைதூக்கியதாலும் வாழைச்சேனை காகிதத்தொழில்சாலை மூடப்பட்டதனாலும் இந்தத்தொளிலும் இல்லாமல் போய்விட்டது.
பிற்காலத்தில் இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்ய துவங்கியதிலிருந்து உற்பத்தியாகும் வைக்கொல்களின் அளவும் இப்பிராந்தியத்தில் குறையத்துவங்கிகிற்று.இயந்திரம் மூலம் அறுவடை செய்யும்போது வைக்கோல் சிறு துண்டுகளாக சிதைக்கப்படுவதாலும் ,ஓரிடத்தில் குவியாமல் வயல் முழுக்க சிதரிக்கானப்படுவதாலும் வைக்கோலை ஒன்று திரட்டி ஏற்றுவது சற்று கடினமான விடயமாகும்,ஆனால் தீவனத்திற்காக கஷ்டப்பட்டு வண்டில் உரிமையாளர்கள் வைக்கோலை ஏற்றிச்செல்கின்றார்கள்,
இப்புகைப்படம் நேற்று நிந்தவூரில் என்னால் பிடிக்கப்பட்டது .

மு.இ.உமர் அலி
2015 july 23rd

Tuesday, July 21, 2015

காலாவதியான காவின்கள் !

காலாவதியான காவின்கள் !
....................................................
எண்ணங்களால்
விவாகரத்துச்செய்துகொண்ட
எத்தனையோ உள்ளங்கள்
இன்னும் ஊருக்கும் பேருக்கும்
ஒட்டிக்கொண்டு உறவாடுகின்றன!

ஒட்டறை பிடித்த
உறவுகளில்
தொடரும் பிடிவாதம்
புதிதாக வலைகளைப் பின்னி
சத்தோசத்தை சிக்கவைத்து
சிறைப்பிடிகின்றது!
அநேகமானோர்
நேர்த்திக்கடன் இல்லாமலேயே
தீமித்து
அலகு குத்துகின்றனர்
அப்பப்போ
காவடியும் கூட ஆடுகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில்
வார்த்தைகளுக்கு மட்டும்
தடைவிதிக்கும் வாய்
உபவாசம் இருந்து
பிறைகாணாமலேயே
பெருநாள் கொண்டாடுகின்றது!.
மு.இ.உமர் அலி
2015 JULY 21ST

Saturday, July 18, 2015

தடுமாற்றம்

தடுமாற்றம்
.....................
பெருநாள் கொண்டாடும்
நண்பனை வாழ்த்தினேன்
பதிலுக்கவன்
உன்னை நாளை வாழ்த்துகிறேன்
இன்று வாழ்த்த முடியாமலுள்ளேன்
என்றான்.

பாதியிலே பிரியாத
எங்கள் பால்ய சினேகம்
பங்கமடைந்து
அந்யோன்யம்
அக்கரைக்கு போய் விட்டதோ என
ஏதோ ஒன்று
நெஞ்சை வருடிச்செல்கிறது!
2015 07 18

தட்டுக்குத்து!

தட்டுக்குத்து!
........................
உளநோயால் பீடித்து அதிவேகமான செயல்பாடுகளுடன் கட்டுக்கடங்காமல் மற்றவர்களுக்கு தீமை செய்துகொண்டு ஒருவர் நடந்துகொள்ளும்போது அவரை உளநல வைத்தியர்களாக போற்றப்பட்ட "பரிசாரிமார்களிடம் " கொண்டு சென்று "இவரை வெளிசாக்கித்தாருங்கள் " எனக்கூறி ஒப்படைப்பார்கள்.
இவாறு ஒப்படைக்கப்பட்ட நோயாளிகள் ஆஜானுபாகுவாக இருக்கும் பரிசாரிகளின் உடல் உள ரீதியான தாக்குதல்களுக்கும் பயிற்சிகளுக்கும் கட்டாயம் அடிபணியவேண்டிய நிலை ஏற்படும்,
இதையும் மீறி "ராங்கி " காட்டுபவர்களை சங்கிலிகளால் கட்டி வைத்து ஆக்கினைகள் செய்து தனிமைப்படுத்தி அவர்களை பலமிழக்கச்செய்வது வழக்கம்.
இவ்வாறு அடங்காதவர்களை கட்டிவைத்து பரிசாரம் பார்த்து அடக்குவதை தட்டுக்குத்தில் போடுவது என்று அழைப்பார்கள்.

முன்பெல்லாம் வீட்டில் சுட்டித்தனமும்,துஸ்டத்தனமும் கூடிய சிறுவர்களை "உன்னை தட்டுக்குத்தில் போடுவேன்" என எச்சரிப்பார்கள்.
மு.இ. உமர் அலி
2015 july 18th

Thursday, July 16, 2015



சில்லுப்போடுதல்
................................
அந்தக்காலத்தில் சுமைகளை ஏற்றி இறக்குவதற்கு மாட்டுவண்டிகளே அதிகம் பயன்படுத்தப்பட்டன.
இப்போது இருப்பது போன்று தார்,கொங்கிரீட்,கிரவல் வீதிகள் இருக்கவில்லை.மணல்பாங்கான வீதிகளும் ,ஒழுங்கைகளுமேஅதிகமாக இருந்தன.மணல் வீதிகள் புதையக்கூடியன,வண்டிகள் இப்பாதைகளில் புதைந்த வண்ணமே பயணிக்கும்.


நெல் போன்ற பாரமான சுமைகளை ஏற்றிக்கொண்டு இரட்டைக்காளைகள் பூட்டிய வண்டிகள் பயணிக்கும்போது மாடுகள் களைத்து ,ஒன்றுடனொன்று ஒத்துழைக்காமையால் வண்டி சிலவேளை நடுவீதியிலே நகராமல் நின்று விடும்.

வேறு ஆட்களின் உதவியுடன் இரு சில்லுகளையும் இருபக்கம் நின்றுகொண்டு முன்னோக்கி நகர்த்தும்போது வண்டிக்காரர் மாடுகளின் வாலினைத்திருகியோ அல்லது கேட்டிக்கம்பின்னால் பிட்டப்பகுதியில் குத்துவதன் மூலமோ காளைகளை உசாரடையச் செய்வார்.

சுமையுடன்கூடிய வண்டியை சில்லுகளில் பிடித்து உருட்டுதல் களைப்பை தரக்கக்கூடிய ஒரு வேலை,இதன்போது "இந்தா.....................ஒடீ................ஈ..." என்று உரத்துக்கூறுவார்கள்..

இவ்வாறு நகர மறுக்கும் வண்டிகளை பலப்பிரயோகம் செய்து நகர்த்துவதை எமது முன்னோர்கள் "சில்லுப்போடுதல்" என அழைத்தார்கள். சில்லுப்போடத் தெரியாதவர்கள் சில்லுபோடும்போது அச்சாணியில் பூசியிருக்கும் கருப்புநிற " மசை " ஆடைகளிலோ அன்றி கைகளிலோ அப்பிக்கொள்ளும்.
அவ்வாறு அப்பிய மசையை இலகுவில் அகற்றமுடியாது.

யாருக்காவது சில்லுப்போட்ட அனுபவம்மிருந்தால் பகிருங்களேன்

மு.இ.உமர் அலி
2015 July 16th

Saturday, July 11, 2015

குறும்பா-1

புள்ளத்தாச்சி வெள்ளாமையை
புளுவரிச்சி தின்னுதடா
எண்ணய அடிச்சடிச்சி ஆள்ள பாடு
அரைவாசி முடியுதடா!