நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Monday, September 29, 2014

பார்வை ஒன்று கொண்டிருக்கி !


 
 
பார்வை ஒன்று கொண்டிருக்கி !
...........................................

நல்லா இருந்த பிள்ளை
இப்ப நடுங்கி நடுங்கி கதைக்கிறான்
ஒதுங்கி மூலையில் பதுங்குகிறான்
விழி பிதுங்கி பிதுங்கி முழிக்கிறான்!

அரக்கப்பரக்க பார்க்கின்றான்
உரக்கப்பேசினா திடுக்கிடுறான்
பிள்ளை சிரிச்சி நாளாச்சி
முகத்தில முடியும் வரும் வயசு!

தண்ணி ஓதி அடிக்கணும்கா
தம்பிய தனிய வெளியால விடாதகா
பரிசாரியப் பார்க்கணுங்கா புள்ளைய
வெளிசாக்கி நாம எடுக்கணுங்கா!

பரிசாரி வாறார் தோழில் துண்டோடு
தலையிலுமொரு வெண் முண்டாசு
தம்பியப்பார்க்கிறார் தலைகீழா
உசரத்தை அளக்கிறார் கண்ணூடா !

தலையை ஆட்டுறார் தன்னாலே
நோயத் தேடுறார் கண்ணாலே
தொடையால் தாளம் போட்டு
விரலால் தட்டுறார் தரைமேலே

மடையக் கிடைய கடந்தாயா
சுடலப்பக்கம் போனாயா
கடலில தனிய நனைந்தாயா
கறுத்த நாய்கண்டு பயந்தாயா?

மசண்டைக்க மரத்தடி நின்றாயா
உச்சியநேரம் ஒசந்த மரத்தடி தரித்தாயா
அங்கெலாம் தம்பி ஒனக்கென்ன வேல
அச்சிரம் முறிஞ்சிட்டு அதுதான் காரணம் !

கேள்வியும் அவரே பதிலும் அவரே
பல்லை நறும்புறார் பலமுறை
பேயுடன் பேசுறார் நமக்கு புரியலை
இல்லை என்கிறார் மறுத்து
தலையை அசைகிறார் வெறுத்து!

கண்ணை மூடி கடுந்தவம்
பிறர் நெஞ்சுக்குள்ளோ பெரும் பயம்
திண்ணை கோடி எல்லாமே
திமித்துப்போகுது ஒருகணம்!

பட்சி பறந்து போகையில
பகலடங்கி ஒடுங்கையில
பார்வை ஒண்டு கொண்டிருக்கி
புள்ள அதில பயந்திருக்கி!

பயப்பிட ஓண்டும் தேவையில்ல
இதுல குறிப்பிட்டுச்சொல்ல எதுமில்ல
பத்தியம் காக்கணும் பத்துநாள்
இது கட்டாயம் போயிடும் தன்னால்

தண்ணி ஓதி அடிச்சிருக்கன்
வெள்ளி வரைக்கும் பொறுத்திருங்க
வெள்ளிக்கூடு வாங்கிக்கங்க
மகரிக்கு முன்னே நான் வாறன்

இடையில ஏதும் நடந்ததுண்டா
பத்திரக்கொத்தால் தலையிலடி
நித்திரையில் கத்தினால் முகத்தில் ஓங்கியடி
அதுக்குங்கேளாட்டி தூ...த்தூ ... என்று
பக்கத்தில் காறித் துப்பு!

கொடுத்த காசை
இடுப்புப்பட்டியில் செருகிக்கிட்டு
கொடுப்புக்குள்ளால் சிரிச்சிக்கிட்டு
அடுத்த வீட்டுக்கு போறார்
அவரது அன்றாடத்தொழிலைப் பார்க்க!

மு.இ.உமர் அலி
2014.Sept 30th

0 கருத்துக்கள்:

Post a Comment