வரம் கொடு!
ஒரு தரம்
செவி கொடு
கரங்களால் நீ
கன்னத்தில் வரைந்த
முரட்டு ஓவியம்
வலிக்கவில்லை!
சின்னச்சின்ன ஆசைகள்
சிறகடிக்க முனைகையில்
சிறகொடித்து முறித்ததுதான்
வலியெடுத்து வருத்துது!
மன
உண்டியலை உடைத்து
உன்முன்னால்
கொட்டிக் காட்டுகிறேன்
கொஞ்சம் நில்
இத்தனை நாள்
சேர்த்துவைத்த
எண்ணச் சில்லறைகளை
எண்ணிக்காட்டுகின்றேன்
நின்று
எண்ணிவிட்டுச் செல்!
எனக்கொன்றும்
தரவேண்டாம்
நீ கொடுத்தவைதான் அவை
நீயே எடுத்துச்செல்!
உண்டியலுக்குள்
இனி இடமில்லை
ஓட்டையும் போட
முடியவில்லை!
வழி கூறிப்போ
என்
விழி நிறையுதிப்போ!
ஒரே ஒரு
வரம் கொடு!
ஒரு தரம்
செவி கொடு
மகளிர் தினத்திலே ,இந்த வரிகளை சமர்ப்பிக்கின்றேன்,உண்மையில் இது வாழ்த்துகின்ற நாளில்லை நாம் வருந்த வேண்டிய நாள்.எனது வருத்தங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்!
உமர் அலி முகம்மதிஸ்மாயில்
8TH MARCH 2014
0 கருத்துக்கள்:
Post a Comment