நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, July 2, 2014

ஈச்சங்கொட்டை



ஈச்சங்கொட்டை
.................................

கோப்பையிலே நோன்புக்கஞ்சி
மூணு சுளை ஈச்சம் பழம்
பள்ளித் திண்ணையிலே
பன் பாய்விரிச்சி
தடபுடலாய் நடக்குமொரு இப்தாறு !

பாங்கு சொல்லும் நாழி வரை
நாளெல்லாம் காத்திருந்து
ஏங்கிய நேரம் வரும் !

எங்கிருந்து வருவாரோ
எனக்குத்தெரியாது
தங்கு தடையின்றி
சனமும் வரும் பள்ளிக்கி!

எல்லாரும் நோன்பு திறக்கையில
எங்கட கண்களெல்லாம்
எச்சிப்பாயில ஈ போல
ஈச்சங்கொட்டையிலதான் மொய்க்கும்!

ஆக்கள் எழும்ப முன்பு
அக்கம் பக்கத்தில
அப்படியே அமுக்கிடுவோம்
எழும்பி போனபின்பு
உளுந்தடிச்சி மற்றதெல்லாம்
பொறுக்கிடுவோம்!

கடதாசி பொட்டலத்தில்
கழுவாம சுத்திவைப்போம்
தொழுது முடிந்த பின்னால்
கழுவிக் காய வைப்போம் !

வீட்டில சேர்ந்தவற்றை
கொட்டிடாம உம்மா வைப்பா
கேட்டுக் குழருவேன்
குழப்படி பண்ணுவேன்
என நினைப்பா!

மறு நாள் காலையில
பக்கத்துவீட்டு குப்பத்திடல்
குடும்பத்து வீடுகள்
ஒரு இடமும் தவறாமல் கால்சட்டை
பக்கட்டு நிரம்பி வழியும்வரை
பொறுக்குவோம்
பின்னர் அத பதுக்குவோம்!

காசை விட மதிப்பதுக்கு
ஏசினாலும் விடமாட்டோம்
அடிக்கடி பூசை விழும் அதனால
எங்களுக்குள் அடிபிடியும் ஏற்படும் !

பெரிய வீரர்கள் ஆடுவது வெய்யிலிலே
ஊரின் ஈச்சங்கொட்டை விளையாட்டோ
நல்ல நிழலிலே!

ஆலமரத் திட்டியிலே
சுள்ளியால கோடு போட்டு
கட்டானில் கால்வைத்து
ஈச்சங்கொட்டை கட்டுவோம் !

ரெட்டைக்கோட்டில் போய்விழுந்த
"ஓணாசி"
நடுக்கோட்டில் காய்விழுந்தா
கடைசி தம்பி, அது உன் ராசி !

கிணற்றடிய புதைச்சி வைச்சி
ஊதிப்பெருத்திருக்கும் "கையான் "
கட்டானில் நின்று
எட்டி அடிப்போம் குறிபார்த்து!

ஒன்டுல பட்டு
கோட்டைக் கடந்தா வெத்தி
அது ரெண்டில பட்டா "குட்டி "
வென்றவன்
கூட்டி அள்ளி தோற்றுப்போட்டு
தெருவில் நிக்கும்
கூட்டாளியிடம் கொடுப்பான்
கூலியா கொஞ்சம்
குண்டை கடைசியில கழிப்பான்!

அங்க வரும்
இடைக்கிடை சோலி
சோலி முத்தினா
அந்த கிடம் காலி

குறுக்கால வந்த ஒருவன்
கூட்டி அள்ளிக்கி ஓடுவான்
இல்லாட்டி வென்று தாறன்
குண்டு தா தட்டி பறிப்பான்
குடுக்காட்டி எட்டி அடிப்பான் !

தோத்தாலும் பரவால்ல
தான்தானே விளையாடனும்
குடுக்காம ஓடுவோம்
அடுத்த இடம் சேருவோம் !

வெண்டா குதூகலம்
தோத்தா முகம் தூங்கும்
தயிருப் பேணிக்குள்ளயும்
பொட்டச் சுரட்டையிலும்
கிடுகு வேலிக்குள்ள
சேத்துவைச்ச குண்டெல்லாம்
பெருநாள் வரும்வரைதான்
மறுநாள் மறந்தே போகும்
மறுபடியும் நோன்பு
வரும் முன்னே
மாரி மழை பட்டு
மண்ணிலே
முதுகாலே முளைக்கும் !

மு.இ.உமர் அலி
2014 July 2
 — with கவிஞா் கி. பாரதிதாசன். பிரான்சுகவிஞர் அன்புடீன்அன்புடன் புகாரிand 46 others.
LikeLike ·  · Stop Notifications · Share

0 கருத்துக்கள்:

Post a Comment